Wednesday, April 13, 2005

Chac - Rain God

போன வாரமே எழுத நினைத்த படம் சாக்-மழைக் கடவுள்(CHAC-Rain God). இதைத் தங்கமணியின் இந்தப் பதிவிற்கு இசைவான படம் என்றும் குறித்திருந்தேன். ஞாயிற்றுக் கிழமை டைகர் வுட்ஸ் என்னும் அற்புதமான கோல்· ஆட்டக்காரணின் ஆட்டத்தில் ரசித்து பதிவு இரண்டாம் பட்சமாகிவிட்டது. பெரியோரை வியத்தலும் இலமேயில் தனிப்பட்ட அளவில் பாக்கியிருப்பது அற்புதமான விளையாட்டக்காரர்கள் மட்டும் தான். சரி இதை நீட்டிப்பது இந்த வலைப் பதிவிற்கு நியாயமாக இருக்காது. கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சுரம். குடும்பமே சுரத்தில் வீழ்வது இது தான் எனக்கு முதன் முறை.இரண்டாம் நாளான இன்று இதை எழுத சற்று தெம்பு வந்துள்ளது. சாக்- மழைக் கடவுள் பற்றிய இந்தப் பதிவு இந்தப் படத்தை பார்க்காதவர்களின் கன்னி சுவாரசியத்தை கண்டிப்பாகக் கெடுக்கும் வாய்பு சற்று அதிகமாகவே உள்ளது. ஆகவே உள்ளே செல்லும் முன் யோசித்துச் செல்லுங்கள். நானாக இருந்தால் நுழைய மாட்டேன்.

தென்/மெரிக்க/மத்திய அமெரிக்க தொல்குடி இனமான மயன் இனத்தவரைப் பற்றிய படம். அஸ்டெக் மற்றும் மயன் இனத்தவரைப் பற்றி முதல்முதலில் அறிந்தது முத்து காமிக்ஸில் தான் என நினைக்கின்றேன் (இல்லை குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்னும் அற்புதமான புத்தகத்திலிருந்தா?). இந்துப் புராணக்கதைகளில் வரும் நகரங்களை நிர்மானிக்கும் மயன் என்பவனுக்கும் இந்த இனத்தவருக்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தை அந்த அரை டிரௌசர் காலத்தில் யோசித்து, அதன் விளைவாகவே இந்த இனத்தவர் மனிதில் உறைந்தனர். அதன் பிறகு இந்த இனத்தவரைப் பற்றிய எந்தச் செய்தியிருந்தாலும் படித்து விடுவது வழக்கமானது.
அந்த வகையில் தென்/மத்திய அமெரிக்க தொல்குடிகள், ஸ்பனிஸ் வருகை, அமேசான் நதி, அதைச் சுற்றியுள்ள மர்மப் புனைக்கதைகள் என ஒரு சுவாரசியம் ஒட்டிக் கொண்டது. அந்த ஆர்வத்தில் போன வருடம் பார்த்த படம் aquirre - wrath of God. அதன் அனுபவத் தொடர்பினால் கிடைத்தது தான் இந்தப் படம். சில மாதங்களுக்கு முன் மயன் இனத்தைவரைப் பற்றி நேஷனல் ஜியாகிரபியில் ஒரு கட்டுரை வந்தது இந்த இனத்தவரின் நரபலி வழக்கத்தைப் பற்றிய ஒரு இளம் மம்மியின் படத்துடன் கூடிய கட்டுரை அது. நரபலி இவர்களின் முக்கியமான வழிபாடுமுறை அதுவும் மழை பெய்யும் கடவுளுக்கான என்ற அந்தச் செய்தி தான் இந்தப் படத்தப் பார்த்தவுடன் அள்ளத் தூண்டிய விடயம். வெள்ளை இனத்தவரின் "வாசம்" பட்டு தன் சுயப் பண்பாட்டை தன்னையறிமால் இழக்கும் ஒரு இனத்தவரைப் பற்றிய படம் இது. தீதும் நன்றும் பிறர் தர வார என்னும் படியாக இந்தப் படத்தில் ஒரு வெள்ளைக் காரனும் கிடையாது( ஒரு விதிவிலக்கைத் தவிர, அந்த விதிவிலக்கு என்ன என்பது நல்ல டிரிவியா ( trivia) கேள்வி.

படம் Popul Vuh என்னும் மயன் இனத்தவரின் புனித புத்தகத்தை ஆதாரமாகக் கொள்வதாக சொல்லி ஆரம்பிக்கின்றது. பொபல் வூவும் கிறிஸ்தவ மத வெறியர்களின் மாற்று மத இலக்கியங்களை எரிப்பிலிருந்து தப்பிய ஒன்று. அதை மீட்டவரும் ஒரு ஸ்பானிஸ் கிறிஸ்தவ மத குருமார் தான் என்னும் போது ஏனோ தமிழில் வேத குருமார்களால் எரிக்கப்பட்ட காப்பியங்களும் பின் அதன் மிச்ச மீதியை காப்பாற்றிய அதே வேதப் பாரம்பரியத்தில் வந்த உவேசாவும் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பொபல் வூ கதை இரு இரட்டையருக்கும் பாதாள நகரத்து க்ஷ¢பால்பன்ஸ் என்னும் கடவுளருக்கும் நடக்கும் போட்டியைப் பற்றியது எனச் சொல்லி கதை ஆரம்பமாகின்றது. கடவுளுடன் போட்டி போடலாம், கடவுளை வாயில் வந்ததைச் சொல்லித் திட்டலாம், கடவுளை நண்பனாக கருதி தோளில் கை போடலாம் ஏன் கடவுளை சாத்தானாகக் கூடிக் கருதி அவனது "உக்கிரத்தை" பலி கொடுப்பதன் மூலம் தணிக்கலாம் என்னும் கருத்தாக்கம், தமிழகத்து தொல்குடி பழக்கங்களுடன் அதிசயமாக இணைகின்றது. படம் ஒரு சிறு கிராமத்தில் ஆரம்பிக்கின்றது. எந்தக் காலம் என்பதெல்லாம் தெரிய அவசியமில்லாத வகையில் ஒரு பொருள் ரீதியான வளர்சியில் உறைந்து போன கால கட்டமாக எனக் கூடச் சொல்லலாம். ஒரு குறி சொல்லுபவனைச் சுற்றி அந்த கிராமத்து பெரிசுகள், ஆண்கள் பெண்கள் எனக் கூடி நிற்கின்றனர். எபோழுது மழை வரும், விளைச்சலை ஆரம்பிக்கலாம் என்பது தான் கேள்வி. குறி சொல்லுபவனும் சோழியை உருட்டி விட்டு அந்த மக்களிடம் சாரயம் கேட்கின்றான். அத்ற்கு முன்னமேயே நிறைகுடமாக இருக்கின்றான்.மழை வரும் விளைச்சலை ஆரம்பிக்கலாம் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லி சாராயத்துக்கு ஆளாக பரக்கின்றான். கிராமத்து தலைவன் தனது அருகில் நிற்கும் ஒருவனைப் பார்க்க அவன் பின் பக்கமாக சென்று தன் மனைவியிடம் வீட்டிற்குப் போய் சாராயம் எடுத்து வா என்கிறான். உடனே அவள் " ஏன் நம்ப வீட்டு சாராயம் தான் இதுக்கு தரணுமா". அப்படியே இந்தக் காட்சியை தமிழ் சூழலில் பொருத்தலாம். அந்தச் சூழலில் வரும் முக பாவங்களை எங்கே நேரில் பார்த்தது போல இருந்தது சில்லிட வைத்தது. அந்தக் கூட்டத்தை மறைவில் இருந்து ஒரு ஊமைச் சிறுவனும் பார்க்க அவனது தந்தையும் கூட்டத்தினரும் சின்ன பையன் எல்லாம் இங்கே வரக்கூடாது ஓடு எனச் சொல்லி விரட்டுகிறார்கள். துடுக்குச் சிறுவனும் ஓடி மறைகின்றான். போதையேறிய குறி சொல்லுபவனும் அப்படியே மயங்கிச் சரிகின்றான் குறியேதும் விளக்காமல். மழையை நம்பிப் பிழைக்கும், காலத்தால் உறையப்பட்ட சமுதாயம் அந்த மழையை வரவழைக்க போடும் யுத்திகள் தான் என்ன என்ன. கன்னிப் பெண்ணை நிர்வாணமாக சுற்றி வர வைத்தால்( கிழக்கே போகும் ரயில் ஞாபகம் இருக்கா?)
, கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் நடத்தினால் எனவெல்லாம் போகும் தமிழ்ச் சமுதாயம் போலவே தடுமாறிய மத்திய அமெரிக்க சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்வது?. மயன் இனத்தவரின் வீழ்ச்சியை இந்தப் புத்தகம் கோடு காட்டுகின்றது எனப் படித்தேன். படிக்க வேண்டும் என லிஸ்டில் உள்ள புத்தகம் Collapse: How Societies Choose to Fail or Succeed. தண்ணிர் பற்றிய பாதுகாப்பு உணர்ச்சி கொஞ்சமும் இல்லாத, இந்தியா சார்ந்த தமிழ்ச் சமுதாயம் தண்ணிர் வறட்சியால் வீழப்போகின்றது என ஒரு நெடுங்கவலை எனக்குண்டு.


கிராமத்து மக்களுக்கு கவலை அதிகரிக்கின்றது. திரும்பவும் கூடிப் பேசுகின்றனர். அந்தக் கிராமத்து தலைவன் வெள்ளையர் வாசம் பட்டவன். டார்ச் லைட்டும் வின்செஸ்டரும் வைத்திருப்பதோடு இல்லாமல், வானிலையை முன்கூட்டியே அறியமுடியும் என தெரிந்து வைத்துள்ளவன். தன் கிராமத்து பண்பாடுகளின் மீதான ஒரு கலக்கம் கொண்டவனாக இருக்கின்றான். தனது இன சுய பண்பாட்டை முழுவதும் மீற முடியாத, அதே சமயம் முழுவது ஏற்றுக் கொள்ளவும் முடியாத பாத்திரமாகி இந்தப் படத்திற்கு ஒரு வில்லன் போன்ற ஒரு அந்தஸ்தை பெறுகின்றான். கிராமத்து முதியவர்களின் பேச்சைக் கேட்டு , மலையில் குடியிருக்கும், "பழைய வழிகளை" முழுவதும் உள்வாங்கி ஒரு சித்த நிலையில் இருக்கும் சாமியாடியைச் சந்தித்து அவனை சாக் எனப்படும் மழைக்கடவுளை வேண்டுவதற்கு அழைத்து வருவதற்கு புறப்படுகின்றான். காடு மலையெல்லாம் ஏறி சாமியாடியைச் சந்திக்கின்றனர். கிராமத்து தலைவனது நம்பிக்கையின்மை சாமியாடிக்கு தெரிந்து விடுகின்றது. சாமியாடி வேண்டுதலுக்கு இணங்கி, கிராமத்தினருடன் புறப்படுகின்றான். ஆனால் கிராமத்து தலைவனுக்கு எரிச்சலூட்டும் வண்ணம், வேறொர் சுத்துப் பாதையில் கிராமத்துக்ச் செல்கின்றான். ஒரு இடத்தில் தலைவனது நம்பிக்கையின்மையின் காரணமாக சாமியாடியையும் அவனது கிராமத்தினரையும் , தலைவனும் மற்றும் ஓரிருவரும் பிரிந்து விடுகின்றனர். சாமியாடி முதலில் கிராமத்துக்ச் சென்று வேண்டுதலுக்கான நடவடிக்கையில் இறங்குகின்றான். தலைவன் தூரத்தில் இருந்து பார்க்கும் படி ஆகின்றது. வேண்டுதலின் உக்கிரத்தில் மழை வருவது போல் போக்கு காட்டி மழை வராமல் ஏமாற்றி விடுகின்றது. அதிர்ச்சி அடைந்த சாமியாடி இன்னமும் இரண்டு நாட்களில் மழை வரும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றான். இதற்கிடையில் சாமியாடியின் அபிமானத்தைப் பெற்ற ஊமைச் சிறுவன் வெயில் கொடுமையில் மயக்கம் அடைந்து பின் இறந்து விடுகின்றான். அவனது தாயின் ஒப்பாரி, அப்படியே தமிழ்நாட்டு ஒப்பாரியில் வரும் வசனத்தை ஒத்து வருவது இன்னமும் ஆச்சர்யம். இந்தச் சாவை சாமியாடியின் மீது போட்ட கிராமத்து தலைவனும் சிறுவனின் தந்தையும் , பழி வாங்க வேண்டும் என புறப்படுகின்றனர். புறப்பட்டவர் என்ன செய்கின்றார்கள், சாமியாடி என்னவானான், மழை வந்ததா போன்ற கொஞ்ச நஞ்ச சுவார்சியத்தை மிச்சம் வைக்கலாம் என்னும் ஒரு எண்ணம்.

இந்த குறுந்தகட்டில் இயக்குனரின் பார்வையிலும் படம் பார்க்கலாம். மிக எளிமையாக விளக்கம் சொல்கின்றார். முழுவதும் பார்க்காமல் சில இடங்களை மட்டும் தெளிவிற்க்காக பார்த்தேன். ஒரு முக்கியமான இடத்தில் விளக்கமும் சொல்லவில்லை, கதாபாத்திரங்கள் பேசுவது சப் டைட்டிலில்லும் வரவில்லை. இந்தப் படத்தைப் பற்றிய விவரங்கள் பல இருக்கின்றன இணையத்தில். எனக்கு அதிர்சியாக இருந்த செய்தி இதில் நடித்தவர்கள் எவரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அனைவரும் இந்த படம் எடுத்த இடத்தில் இருப்பவர்கள். இந்தப் படம் வந்தது 74ல். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் ஒரே பிரதி கிடைக்கப் பட்டு டிஜிட்டல் செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தில் இருக்கும் இந்தப் படத்தினை கூடவே இந்த படமெடுத்த சூழலையும் கூட்டி இணைத்து செய்யப்பட்ட விவாதம் நல்ல ஒரு புரிதலைத் தரலாம். இந்தப் படத்தைப் பற்றி மேலும் விரித்து எழுத ஆவல் ஆனால் சுரம் போதும் போதும் என்கின்றது. நேரம் கிடைத்தால் விரித்து இந்தப் படத்தின் "பிரதி"யை நான் எப்படி பார்த்தேன் என்று எழுத வேண்டும்.

1 comments:

'))'))'))')) said...

இப்பத்தான் மாண்டியின் பயாஸ்கோப்பின் வழி இங்கு வந்து பார்த்தேன். படம் பார்க்கவேண்டும்.
தவிர தண்ணீர் வறட்சியால் தமிழகம் வீழப்ப்போவது பற்றிய கவலை எனக்கும் மிகவும் உண்டு. எல்லா நீர்நிலைகளும் அழிந்து வருகின்றன. பேய்போல தமிழர்கள் ஆழ்குழாய்க் கிணற்றுப்பாசனத்தை செய்து வருகின்றனர். நான் பார்த்து 6 குளங்கள் (ஒன்றோடு ஓன்று இணைக்கப்பட்ட) இருந்த ஊரில், இப்ப மார்க்கெட்டும், பேருந்து நிலையமும் இருக்கிறது.

தமிழன் சுயநலமானவன், குறுகிய காலப் பயனின் கவர்ச்சியில் மயங்குபவன் என்பதெல்லாம் இந்த தண்ணீர் விசயத்தில் என்னை அச்சுறுத்தும்.

அதுவும் கர்நாடாக கூட தனது நீர்நிலைகளை ஆழப்படுத்தி, கட்டமைக்கப்போகிறது. அறிவற்று நாம் இருக்கிறொம்.