Sunday, April 29, 2007

Children of Men / ஆண்களின் குழந்தைகள்

இயக்கம்: அல்ஃபொன்சோ கோரன்

குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்பது போல குடித்து விட்டு படம் பார்க்க கூடாது என்று ஒரு சட்டம் வரவேண்டும். அதுவும் வலைப் பந்து / உருளைகட்டை பந்து(baseball) என்று தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே அரட்டை அடித்து விட்டு குடித்து விட்டு தின்று விட்டு, எல்லா உணர்வுகளும் இழந்து, எல்லோரும் போன பின் அடடா, இதை நாளைக்கு திருப்பிக் கொடுக்கவேண்டுமே என்று அவசர கதியில் தனியே உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாது என்று கூட சட்டம் போடலாம். என்ன செய்வது அப்படிப் பார்த்த படம் தான் இது. ஏதோ ஒரு காட்சியில் தூங்கி சற்றென விழித்து எந்தக் காட்சியை தவற விட்டேன் என்பதும் தெரியாமல் பார்த்த படம் தான். இவ்வளவு குளறுபடிக்கு அப்புறமும் இந்த பட விமர்சனம் தேவையா என்றால். தேவை எனலாம். திரும்ப எப்பொழுதோ, இந்தப் படம் நினைவில் இருந்து சுத்தமாக அகண்றவுடன், திரும்பப் பார்த்தால் வரும் விமர்சனம் எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு பார்க்கவும் வசதிப்படும். காட்சிகள் குளறுபடியாக விமர்சனத்தில் இருந்தால் பின் ஈனத்துவம் மேல் பழி போட்டுக் கொண்டால் போச்சு.

2020ல் நடப்பதாகக் கதை ஆரம்பமாகின்றது. 17 வயது நிரம்பிய உலகின் மிக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று ஒரு காபி கடையில் டிவி செய்தி அறிவிக்கின்றது. "மிக இளைஞர்" என்ற பதம் தான் கதைக் கரு.



கதாநாயகன் என்னும் தியோ கடையிலிருந்து வெளியே வந்து, வாங்கிய காப்பியில் வோட்கா கலந்து கொண்டிருக்கும் போது ஒரு பெருத்த வெடிச்சத்தம். காப்புக்கடை நாசம். கொய் என்ற சத்தத்துடன் தியோ நடக்க, லண்டன் நமக்கு அறிமுகமாகின்றது. காட்சிகள் ஒரு சாம்பல் நிறத்தில் இருப்பது இந்த படத்திற்கு மிகவும் ஏற்றதாகப் பட்டது. லார்ட் ஆஃப் த ரிங் படத்தில் அந்த சாகவரம் பெற்ற இனத்தவரது தலைவன் வீடு வரும் காட்சிகளது சாம்பல் ந்றத்தவுடன் இந்த சாம்பல் நிறம் சற்று மாறிய நிறம்.
தியோ நடக்கிறார். கொய்ய்ய் என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. அலுவலகம் செல்லுகின்றார். அலுவலகம் தற்போதைய அலுவலகம் போலத்தான் இருக்கின்றது என்ன ஃப்ளாட் பானல் மானிட்டர் மட்டும்ம் சற்று மாற்றம். :-).



அலுவலகமே சோகத்தில் இருக்க, இது தான் சாக்கென்று , அதிகாரியிடம் சென்று வீட்டிலுருந்து வேலை பார்ப்பதாக் சொல்லி வெளியேறுகின்றார். "வீட்டிலிருந்து வேலை" என்பதை I.T நண்பர்கள் "வீட்டுற்காக வேலை" என்று வார்த்தை விளையாடு காட்டுவார்கள். வயித்தெறிச்சலாக என்னைப் போன்று 8ல் 7 மணி நேரம் மீட்டிங்கில் மாரடிப்பவர்களுக்கு , வீட்டிலிருந்து வேலை BPஐக் கொஞ்சம் கூட்டும்.

ரயிலில் திரும்ப வர, உலக நகரங்கள் நிர்மூலமான கதை தெரிகின்றது லண்டன் தவிர. எதனால் என்று சரியாக தெரியவில்லை. மூன்றாம் உலகப்போராகவோ அல்லது இந்த பெட்ரொல் சிலுவைப் போரின் முடிவாகக் கூட இருக்கலாம். லண்டன் மட்டும் தப்பியதால் லண்டனின் முக்கிய பிரச்சனையாக சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் ஆகிவிட்டது போல் அரசு சார் விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. ரயிலுக்கு வெளியில் இருந்து ஏதேதோ கூட்டம் கண்டெதையும் எறிந்து தாக்கு கின்றன. ரயில் ஓரிடத்தில் நிற்க வெளியே வரும் தியோ முகத்தில் கூண்டுகள் (நம் முகத்திலும் தான்) கூண்டிற்குள் வேற்று மக்கள், ஏதேதோ மொழியில் புலம்பிக் கொண்டிருக்க, எனக்கு ராமேச்சுவர அகதிகள் முகாம் ஞாபம் வந்தது. இந்த தேவடிய இந்தியமாதாகீசோத் கும்பல்களும் நம் சகோதரர்களை அப்படித்தானே அடைத்திருக்கின்றார்கள் என்ற நினைப்பும் வந்தது.




டப்பா ஸ்டேசனில் அடிக்கொரு போலீஸ். வெளியே வந்தால் ஒரு ஹிப்பிக் கிழவர். இந்தப் படத்தில் எனக்கு தெரிந்த முகம் மைக்கேல் கெய்ன். பிளேம் இட் ஆன் ரியோ என்னும் படத்தில் எனக்கு அறிமுகமானவர் இவர். மற்றொருவர் அப்போழுது அவ்வளவு சுவாரசியமில்லாத டெமி மூர். இதை பார்த்து பல வருடங்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் காட்சிகள் இன்னமும் ஞாபகம் இருக்கு. காட்சிகள் அப்படி ஒன்றும் மனதைத் தொடும் காட்சிகளும் இல்லை. எனக்கும் ஞாபகசக்தி அவ்வளவாகக் கிடையாது. ம்ம் வேறன்ன அந்த வயதில் வேறெதையோ தொடத்தூண்டிய செகைக் காட்சிகள் தான் ( நன்றி இராம.கி ) கெயின் வீட்டிற்கு செல்லுகின்றார்கள். கெயின் வீடு ஒரு ஒதுக்குப் புறம். வீட்டில் கோமா நிலையில் இருக்கும் அவரது மனைவி. அவரது வீட்டில் புகைப்படங்களாக, கதைச் சூழலைப் பற்றிய சிறு வரலாறு.




வீட்டில் தியோவின் படமும் இருக்கின்றது - குடும்பத்துடன். கிழவரும் தியோவும் கதை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உலகம் எப்படி பிள்ளை பெறும் வரம் இழந்தது என்ற கேள்விகளைக் கேட்டு , கூடவே மனித புறத்திட்டு (human project) பற்றி கோடிகாட்டி பேசுகின்றனர். [ இங்கே இராம.கியின் சொல்லாக்க முயற்சிகள் பற்றி என் எண்ணத்தைச் சொல்ல ஆசை. இந்த செகை, புறத்திட்டு போன்றவற்றை என்னால் நடையோடையில் புகுத்த முடிவது கண்டு மிக ஆச்சர்யம்.. ஆங்கில சொற்களுக்கு, ஆங்கில சொல் ஒசையின் அடிப்படையில், தமிழ் சொல் வேரிலிருந்து வார்த்தை அமைக்கும் முறையை, தமிழ்சார் கல்விக்கூடங்கள் சுவீகரிக்க/அங்கீகரிக்க வேண்டும். இந்த இணையத்தில் தமிழில் எழுதபவர்களும் முயற்சி செய்து இவரது சொல்லாக்கங்களை ஏற்றால், விரைவில் பெரும் பெரும் அறிவியல்/தத்துவ ஆக்கங்களை மொழிமாற்றம் செய்ய இந்த்ச் சூழலே நம்மை தயார் செய்யலாம்]

தியோ அடுத்த நாள் எழுந்து வெளியே செல்ல முற்படுகையில், இரு குண்டர்களால் கடத்தப்படுகின்றான், குண்டர்கள் அவனைச் சேர்க்கும் இடத்தில் அவனுக்கு ஒரு ஆச்சர்யம், வெகு நாள் பிரிந்திருந்த அவனது மனைவி அவனைச் சந்திக்கின்றாள்.




அந்த மனைவியாக நடித்திருந்தவரும் எனக்கு அறிமுகமானவர் தான் ஜீலியன் மூர். ஆரம்பகாலத்தில் இவர் சிறு வேடங்களில் தான் வருவார். அவ்வாறன ஒரு படத்தில் பிள்ளைபேறுக்கு ஏங்கும் ஒரு பணக்காரராக, தாந்திரிக்களில் நம்பிக்கை உடையவராக வருவார். ஒரு காட்சியில் படுத்துக் கொண்டு தன் கால்களைத் தூக்கிக் கொண்டு, தன் கணவனையோ அல்லது வேறு யாரையோ, இப்போழுது நல்ல சமயம், சீக்கிரம் வா என கலவிக்கு கூப்பிடுவார். காட்சி செகையாகவோ, காட்சிவக்கிரமாகவோ, தெரியாமல் பிள்ளைபேற்று ஏக்கம் தெரியும் படி நடித்த அந்தப் படத்தை , பல நாட்கள் என்ன படம் என்று தெரியாமல் திகைத்திருக்கின்றேன், இப்படி பலபடங்களை அரூபக் காட்சிகளாகத்தான் என் ஞாபகச் சக்தி வைத்திருக்கின்றது. இன்னமும் பின்னால் போனால் 9ஆவது அல்லது 8வது படிக்கும் சமயம் பார்த்த ஒரு படத்தின் காட்சி. ஒரு வேன் அல்லது டிரக். டிரக்கில் வெடி குண்டுகள். அந்த டிரக் ஒரு நூல் இல்ல கயிறு பாலத்தில். அந்த சீன் ஒரே பசுமையான இட சூழலில் இருந்த ஞாபகம், இந்த டிரக்கை இருவர் ஓட்டிக் கொண்டு போவார்கள். அருள் தியேட்டர் என்னும் ஒரு தியேட்டரில் பார்த்த படம். என்ன படம் என்று பலகாலமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்....
சரி கதைக்கு வருவோம் -- ஜீலியனும் தியோவும் உரையாடுகின்றார்கள். 3 வயது குழந்தை இறந்ததால் பிளவான குடும்பம் இது . இருவரும் இளவயதில் அக்டிவிஸ்ட் (இயக்கத்தினர் ?)ஆக இருந்தவர்கள், பிள்ளை இறந்தவுடன் மனைவி தீவிர ஆக்டிவிஸ்டானதும் கணவன், எல்லாவற்றின் மீது நம்பிக்கையிழந்தவனாக மாறிப்போனதும் தெரியவருகின்றது நமக்கு. மனைவி ஒரு உதவி கேட்கின்றார், பணம் தருவதாக சொல்லிக் கொண்டு.
அதாவது ஒரு பென்ணிற்கு ( சட்டம்சாரா குடியேறிக்கு) விசா ஏற்பாடு பண்ணித் தர. யோசிப்பதாக சொல்லி உறங்கப் போகின்றார் தியோ.

அடுத்த நாள், குடியேற்ற அதிகாரத்தில் இருக்கும் ஒரு நெருங்கிய உறவினரை சந்தித்து விசாவிற்கு கேட்கின்றார். இந்த இடம் மட்டும் தான், சமூகப்பிளவில் அடுத்த பக்கத்தில் இருப்பவர் முகம் இந்தப் படத்தில்.



அப்படி ஒன்றும் அவர் சந்தோசமாக இல்லை என்பதை, ஒரு 18,19 வயது இருக்கும் (அரிதான இளைஞர் கூட்டத்தைச் சார்ந்த) ஆனால் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு, வீடீயோ கேமில் முழுகி இருக்கும் மகனைக் காட்டி சொல்கிறது படம். இன்னும் நூறு வருடங்கள் போனால் ஒன்னும் இருக்காதே, எந்த நம்பிக்கையில் எப்படி உத்வேகமாக இருக்க முடிகின்றது என்ற தியோ வினாவிற்கு நான் இந்த நிமிடத்திற்காக வாழ்கின்றேன் என்கிறார். வெளியே ஒரு பன்றி (சிலை) பறக்கின்றது..





திரும்ப மனைவியைச் சந்தித்து விசா கொடுக்கும் போது, இது தனிவிசா இல்லை. நான் கூட இருக்கவேண்டிய கூட்டு விசா என்று கூறி கொடுக்கின்றார். இதனால் இவர் மனைவியுடன் போக நேரிடுகின்றது. காரில் ஏறும் போது , இவர் விசா வங்கிய பெண்ணும் அறிமுக மாகின்றார். கார் செல்லும் போது தூரத்தில் ஒரு கலவர கும்பல் இந்தக் காரை துரத்து கின்றது. இவர்கள் தப்பிக்கும் முன் இருவர் பைக்கில் வந்து தியோவின் மனைவியைச் சுட்டு விடுகின்றனர்.




மனைவியை அடக்கம் செய்து விட்டு மனைவி தலைமை வகித்த குடியேறிகள் நலனுக்காக இருக்கும் ஒரு அமைப்பின் இடத்திற்கு செல்லுகின்றனர். பின் என்ன நடந்தது என்பதை வெள்ளித் திரையிலே, டிவித் திரையிலே, மானிட்டர் திரையிலோ காண்க

இந்தப் படத்தின் கரு அதாவது மக்கள் இனப்பெருக்க சக்தியை இழந்து விடுகின்றனர் என்பது சுவாரசியமான ஒன்றாகப் பட்டது. நியூக்ளியர் மழை பெய்து, புல் பூண்டோடு இனம் சடாரென்று அழியப் போகின்றது என்பதாக இல்லாமல், இனப்பெருக்க சக்தியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் அழியக்கூடிய சாத்தியக்கூறு சுவாரசியமானதாக இருந்தது. (தொடர் அழிவுகளோ, அழிவுச் செய்திகளோ நம் மனதில் கூடிய விரைவில் ஒரு வித நம்ப்னெஸ்ஸை கொண்டுவரக்கூடிய நிஜ சாத்தியக்கூறுதான் வயற்றைக் கலக்குகின்றது). மனித இனம் எப்படி இதை எதிர்கொள்ளும் என்னும் பதில் அவ்வளவாக இந்தப் படத்தில் இல்லாமல், அதே சமயத்தில் படத்தில் நிலவிய ஒரு போர்க்கால சூழல் உள்ளுர ஒரு நகையைக் கொடுத்தது எனலாம். இந்த மனித புறத்திட்டு என்னும் நம்பிக்கைக்கீற்று சுத்தமாக இல்லாமல் இந்தப்படம் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாய் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை.


மேலும் படிக்க

Sunday, April 22, 2007

Andrei Rublev / ஆண்ட்ரெய் ரூப்லெவ்

இயக்கம் :: ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கி

60களில் ரஷ்யாவின் மட்டுறுத்தலுக்கு உட்பட்ட படம் என்று டிவிடியின் பின் அட்டையில் பார்த்தவுடன் இதைப் பார்க்கலாமோ எனத் தோனியது. டைரக்டர் பெயரும் , படப்பெயரும் மிக நெருங்கியது கூட ஆவலைத் தூட்டியிருக்கலாம். டார்க்கோவ்ஸ்கி பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருந்தது ஆனால் முழுதாக தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் படம் பார்க்கும் முன் கூகிளிடவும் கஷ்டம். (இல்லாவிட்டாலும் சில சமயம் கஷ்டம் தான்). நாடோடி மண்ணன் பாணியில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் என்று பின் அட்டை பட நிலவரம் சொல்லியது. படக்கதையைப் பற்றி ஒன்றும் காணவில்லை.

ரஷ்யன் மற்றும் ஜெர்மானிய படங்கள் மீது அவ்வளவு உற்சாகம் ஏற்படுவதில்லை இப்போதெல்லாம். காரணம் இந்த உற்சாகம் என்னும் வார்த்தைதான். இது வரை பார்த்த படங்கள் இந்த உற்சாகம், கிண்டலான நகை போன்று மனதை குதூகலிக்கவிடாமல் , ஒருவித சோகம் சார்ந்த, மனவிரக்கம் கொள்ள, மனதைச் சோதிக்க வைக்கும் படங்களாக இருப்பது தான். இந்த இசையோ இன்னமும் கேட்க வேண்டாம். ஏன் இவர்களுக்கு இப்படி? இல்லை நான் பார்த்த படங்கள் தான் இப்படியா?

பட ஆரம்பித்தவிடன் ஒரு பரபரப்பான சூழல். ஓரிடத்தில் சிலர் அங்குமிம் இங்கும் ஏதோ எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த காமிராவிம் கூடவே சுத்துகின்றது. பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் காமிரா ஒரிடத்தில் இருக்க கலைஞர்கள் முன் நடித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது காமிரா கோணம் நகரும் , முன் செல்லும் அல்லது பின் வாங்கி நிற்கும். இதிலோ ஆரம்பத்தில் இருந்து ஓட்ட அசைவு தான். காமிராவும் மக்களும் ஏதோ ஒரு நடன ஒழுங்குடன் அசைந்து கொண்டிருக்கின்றார்கள் கட்டிட மாடிக்கு ஒருவர் ஓடுகின்ரார். காமிராவும் ஓடுகின்றது. மூணு அல்லது நாலு மாடி தொலைவில் இருந்து காமிரா கோணம் ஜன்னல் வழியே பாய்கிறது, கீழே மக்கள், சற்றுத் தொலைவில் ஒரு நீண்ட ஆறு அதில் ஓடங்கள் அல்லது கப்பல்கள் ஏதோ ஒரு ஓழுங்கில் அல்லது ஒழுங்கிலாமல். கீழூ கயிரை அறு என்று ஒருவர் கத்த கயிறு அறுபட ஏதோ ஒன்று மேலே பறக்கின்றது. ஒருவர் பலூன் போன்ற ஒன்றில் தொங்கிக் னொண்டிருக்கின்றார்.



நான் பறக்கின்றேன் பறக்கின்றேன் என்று கத்த பலூன் வேகமாக நகருகிறது. காமிராவும் தான். பலூன் வேகமாக நகர, கீழே நிலமும் வேகமாக நகருகின்றது. மேலே இருந்து கீழே உள்ள இடைவெளி குறைய குறைய தரை வேகமாக தெரிந்து தடாலென்று ஒரு சத்தம். பார்த்தால் பறந்தவர் கீழே கிடக்கின்றார். பாரதிராஜா கட் சாட் போல (டார்கோவ்ஸ்கி மன்னிக்க) ஒரு குதிரை கீழே விழுந்து திரும்ப மேலெழுகின்றது. இது என்ன படிமம் என்று தெரியவில்லை. நெட்டில் தேடவும் அலுப்பு. இந்தப் படம் முழுவது குதிரை படிமம் வந்து கொண்டே இருக்கின்றது. படிமங்கள் மேலே ஏனோ ஒரு சுவாரசியம் குறைந்து வருகின்றது. யாரோ போடும் விடுகதையை எதற்காக யாரோ அவரவர் வழியில் விளக்கிக் கொள்ளவேண்டும்? இது என்ன விளையாட்டு இது? இந்த எலிட்டிசத்திற்கும்(மேட்டிமைத்தனம்?) படிம விளையாட்டிற்கும் ஏதோ ஒரு போலித் தொடர்பு போல ஒரு உணர்வு. இந்த தமிழ் இணையங்களில் இந்த படிம விளையாட்டை ஓரிருவர் ( எனக்கு பிடித்தவர்கள் கூட :-) ) அளவுக்கு மீறி விளையாடி வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்ததால் விளந்த பின் விளைவா இது எனத் தெரியவில்லை.

அந்த பட முன்னுரைக்கு (?) பின் கதை கதைமாந்தருடன் ஆரம்பமாகின்றது. ஒரு ரஷ்ய ஒதுக்குப்புற கிறித்தவ கூடாரத்திலிருந்து மூவர் (ரூப்லாவும் அவர் நண்பர்களும்) ஊரைவிட்டு விலகி மாஸ்கோ செல்ல முனைகின்றார்கள். மாஸ்கோவில் சிற்ப மட்டும் ஓவிய தொழிலிற்காக செல்ல திட்டமிட்டு செல்கின்றனர். சதுப்பு நிலங்கள் - மழை -




ஏனோ இதைத் தொடரும் காட்சி எப்போதோ பார்த்த பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் மற்றுமொரு கருப்பு வெள்ளை படத்தை நினைவீட்டியது. மரணம் செல்லும் இடங்களாக இருந்த அந்தப் படத்தை மற்றுமெருமுறை பார்க்கவேண்டும். தூரத்தில் ஒரு கும்பல் மழைக்கு ஒதுங்கி இருக்கின்றது. உள்ளே மக்கள் குதூகலமாக குடித்துக் கொண்டு இருக்க, ஒரு விதூகன் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார் பாதிரிகளை கிண்டலித்தவாறு.




மிகவும் குதூகலமாக ( இந்தப்படத்தில் முதலும் கடையுமாக) இருந்த இந்த இடத்தில் அந்த பாதிரிகளும் மழைக்கு ஒதுங்க, ஏனோ அந்த இடமே சோகத்தில் ஆழ்கின்றது. பாதிரிகளில் ஒருவர் விதூகனை, சாத்தானோடு ஒப்பிடுகின்ரார். இப்பொழுது குதூகலம் போன இடம் தெரியாது. பாதிரிகளில் ஒருவர் சற்று லேட்டாக நுழைய , பின்னாடி அரசாங்க காவல் நாய்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த விதூகனை நாலு சாத்து சாத்தி கைது செய்து இழுத்துப் போகின்றார். 1400களில் ரஷ்யாவில் கிறித்தவம் அதனது அந்தக்கால இருகல்களுடன் உள்ளே நுழைந்த சமயம் போலும்.

படம் முழுவதும் ரூப்லெவ் என்பவரின் இருபதுகால ஆண்டுகளின் பல சம்பவ கோர்ப்பாக, அவர் பாதிரியாக இருந்த மனநிலையை காட்டியவாரு , அந்தக்கால ரஷ்ய வரலாற்றையும் கோடிட்டு காட்டி இருக்கின்றது.


அடுத்த சம்பவமாக, ரூப்லெவ், அந்தப் பகுதியில் இருந்த நாட்டுப்புற சமய கொண்டாட்டங்களை, ஒரு பாதிரியாக பார்வையிட நேருகின்றது. அந்த ஊர் வசந்த விழா போல ஆண்களும் பெண்களும் உற்சாகமாக ஓடிக்கொண்டும் அங்கங்கே கலவியில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கின்றனர். பாதிரி திகைப்புடன அவர்களை பார்க்கின்றார். விலகி ஒதுங்காமல், ஏனோ ஒளிந்திருந்து அவர்களை கண்ணொட்டம் இடுகின்றார். சில ஆண்கள் அவரைப் பிடித்து கட்டி வைக்கின்றனர். உங்கள் குருமார்களிடம் சொல்லி எங்களைத் தொல்லப் படுத்துவாய் என்று அவரை ஏசுகின்றார்கள். (வார்த்தை விளையாட்டு அல்ல). அப்போழுது அவரை மார்ஃவா என்ற ஒரு பெண் சந்திக்கின்றாள். இருவரும் அவரவர் கண்னோட்டத்தை வெளிப்படுத்தும் உரையாடல் நன்றாக வந்திருந்தது.




அவரது கையும் காலும் கட்டியிருக்க அந்தப் பெண் அவரிடம் காதலைப் பற்றி பெருமை சொல்லி அவரை கட்டி அணைக்கின்றாள். மிகவும் பதட்டமானவராகி தன்னை அவிழ்த்துவிடச் சொல்ல, அந்தப் பென்ணும் அவரை விடுவிக்கின்றாள். பதட்டத்துடன் அந்த இடத்திலிருந்து அவர் ஓட, அவர் ஓடுவதை ஒரு நக்கலுடன் பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் அவள்



அடுத்த நாள் அவர் தன் குழுவினருடன் ஒரு படகுத் துறையில் சேரவும், அங்கே அரசாங்த்தினர், நாட்டுபுற சமய கொண்டாட்ங்கள் நடத்திவர்களை துரத்திப் பிடிக்கின்றது. ஒரு கடவுள் கொள்கையில்லாததால் அவர்களுக்கு அது நிகழ்கிறது என்று இவரது குழுவில் இருந்த ஒருவர் சொல்கின்றார். இவரது படகுக்கு மிக சமீபமாக, அந்த மார்ஃவா என்ற பெண் போலீசிடமிருந்து தப்பி ஆழமான ஆற்றில் கரை தெரியாத திசை நோக்கி நீந்தி செல்கின்றாள். இவர்கள் ஏதும் செய்யவில்லை.




மாதாகோயில் கட்டடவேலை மெதுவாக நடக்கின்றது. இளவரசரின் கட்டிட வேலை அது. ஒருவழியாக அந்தக் கட்டிடம் எழ, இளவரசரின் தம்பி டார்டார் என்னும் ரஷ்யர் இல்லா இனத்தாரின் உதவியுடன் அந்த இடத்தை நிர்மூலம் செய்கின்றான், இந்த டார்டார் என்று அழைக்கப்படும் இனம் சீன இனத்தவர் போல் உள்ளனர், அந்த சமயம் வலுவுடன் இருந்த மங்கோலியராக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன், கருப்பு வெள்ளைப்படத்தில் நான் பார்த்த உச்சகட்ட வன்முறை இதில் தான். ஒருவனது தொண்டை அறுந்து இரத்தம் பீரிடுகின்றது, மாடு எரிகின்றது. ஆமாம். உண்மையிலேயே எரித்துள்ளனர்.



வனவிலங்கு தடுப்புச்சட்டம் எல்லாம் இல்லை போலும்.

இந்த சமயம் , ரூப்லவ்விற்கு ஒரு மனநிலை குன்றிய ஊமைப் பெண் நட்பாகின்றாள்.




அவள் மனநிலைக் குறைவை, மாதாக் கோவிலில் வந்து சிறுநீர்கழிவதாக காட்சியமைத்திருக்கின்றார் டைரக்டர். இந்த செர்மானிய/ரஷ்யப் படங்களில் இது ஒன்று - சிறுநீர் கழிவு ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் அது நடக்கும், பாஸ்பைண்டர் படமொன்றில் நிறுத்தி நிதானமாக இது ஒரு கழிவரையில் நடக்கும்.

இந்தப் பெண்னை டார்டார் இனத்தவன் எட்டாவது மனைவியாக, ரூப்லாவ் ஒன்றும் செய்ய இயலாநிலையில் நடக்கும்.




ரூப்லாவிற்கு இது மேலும் மனவிரக்கத்தைக் கொடுக்கும்.

கதை ஒரு கோயில் மணிசெய்பவனிடம் சென்று அடைகின்றது. கோயில் மணிகள் செய்யும் இடத்தில், கொள்ளை நோய் வந்து, அந்த நிபுனர்களை கொள்ள, ஒரு இளைஞன் தனக்கு தன் தந்தை, அந்த நிபுனத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்கின்றார் என்று சொல்லி அந்த கோயில் மணி செய்யும் வேலையை வாங்குகின்றான். மிக விஸ்தாரம்மாக அந்த பிரமண்டா கோயில் மணி செய்வது படமாக்கப் பட்டிருக்கின்றது. கொஞ்சம் சஸ்பென்சுடனும் கூட.




அந்த வேலை என்னவானது என்ற சஸ்பென்சையாவது விடலாம் என்று நினைக்கின்றேன்.

படமுடிவில், ரூப்லாவின் நிஜ கலைவேலை கலரில் வருகின்றது



கடைசியாக பட இயக்குனருக்கு பிடித்த, எனக்கு புரியாத, குதிரை படிமத்தின் கடைசி காட்சியும் கலரில்



இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது இதன் காட்சியமைப்பு, காமிரா கோனத்துடன்.

சில இடங்களின் காமிரா காட்சிகளில், புகைப்பட ஒழுங்குடன் மிக அற்புதமாக வந்திருந்தது.



பின் தொடரும் இசையும் கூட. இந்த டைரக்டர், அந்தக்கால கிறிஸ்தவ மத கட்டுப்பாடல் அந்த சமுதாயத்திற்கு தேவை என்று நினைத்தாரா, தேவையில்லை என்று நினைத்தாரா என என்னால் உணரமுடியவில்லை. இந்தப் படத்தில் வரும் விரிவான, யேசுவை சிலுவையில் அறையும் சீன், எதற்காக என என்னால் ஊகிக்கமுடியவில்லை. ரூப்லாவின் மதப்பற்றின் ஆழத்தில் இருக்கும் விஷயமா எனவும் யோசிக்கலாம். பாகன் வழிபாட்டுமுறையை எந்த நோக்கில் பார்த்தார் என்வும் எனக்குத் தெளிவாகவில்லை. . இந்த்ப் படம் 60களின் ஏன் "ரஷ்யாவில்" தடைசெய்யப்பட்டது என உணரமுடிகின்றது. நிறுவண கிறிஸ்தவ மத கோட்பாடுகளை ஸ்டாலினிச கம்யூனிசத்துடன் ஒப்புமைபடுத்தி இந்தப் படத்தில் பார்க்கலாம் எனவும் தோனுகின்றது.

பட அனுபவம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என நிச்சயம் சொல்லலாம்.


மேலும் படிக்க