Sunday, December 11, 2005

The River - ஆறு

இங்கே வந்து பல நாட்களாகிவிட்டது. படமே பார்க்க வில்லை அதனால் எழுதவில்லை என்றெல்லாம் இல்லாமல், பார்த்த படம் அடுத்த நாள் நினைவில் அப்படியே இருந்தால் தான் எழுதுவது அதுவும் நேரமிருந்தால் என்று ஒரு முடிவு. பல படங்கள் பார்த்தாலும் அதற்கு அடுத்த நாளே அந்தப் படத்தின் சுவடே இல்லாமல் இருப்பது, படம் பார்த்த அந்த நேர இழப்பை எந்த வகையில் சரி செய்வது என்று குற்ற உணர்ச்சிக்கி ஆளாக்கிவிடுகின்றது. வயது ஆக ஆக, நேரம் காணாமல் போவது போண்ற ஒரு உணர்ச்சி, இந்த மத்திய வயதுக் குழப்பங்களில் ஒன்றா எனத் தெரியவைல்லை. வேலைப் பளு / வீடு மாற்றம் என கடந்த சில மாதங்களாக இந்த நூலகம் பக்கமே செல்லாமல் நேற்றைக்குச் சென்றேன். எதேச்சயாக கண்ணில் பட்ட படம் The River. குரோசோவாவின் 80 களில் வெளியான இது வரை தெரியாத படமும் கண்ணில் பட்டது. அவர் திரும்ப தன்னுடைய சாமூராய் உலகிற்கு சென்ற படம் என்று பின்னால் எழுதியிருந்தது. பேர் மறந்து விட்டது. ஆனால் இந்தியத் தொடர்பு இந்த
THE RIVER படத்தை கையில் எடுக்க வைத்து விட்டது.

வெள்ளைக்காரர்களின் பார்வையில் இந்தியா என்னும் ஒரு மூட்டத்துடனே நேற்றிரவு இந்தப் படத்தை பார்க்கத் தொடங்கினேன். பழைய படங்கள் பார்ப்பது, அதுவும் நான் பிறப்பதற்கு முந்திய படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். அதுவும் "Eastman" கலரிலோ அல்லது "technic" கலரிலே அந்தப் படம் இருந்து விட்டால் அது கொடுக்கும் ஒரு இதம் தனி தான். தமிழில் தில்லானோ மோகனாம்பாளோ, காதலிக்க நேரமில்லையோ அல்லது ஆயிரத்தில் ஒருவனோ அதே அனுபவம் தான். இந்தப் படமும் technic கலரில். அதுவும் இந்தியாவில் எடுக்கப் பட்ட முதல் "கலர்"ப் படம். நம்முடைய அழியாத கோலங்களை மல்லாக்கப் போட்ட மாதிரியான கதை. மூன்று பதின்ம வயதிற்குள் நுழையும் பெண்களின் மனதில் ஏற்படும் அந்த முதல் சலனம் தான் படத்தின் ஆதார நாதம்.

அந்தச் சலனத்தை ஏற்படுவது ஒரே ஆண் தான் என்பதும் அந்தக் கதை காலனியாதிக்க இந்தியாவில் நடைபெறுவதும் கதையின் முக்கிய மாந்தர்கள் மேற்கத்தியவர்கள் என்பதும் அந்த ஆதார நாதத்தை சுற்றிப் பிண்ணப்பட்ட இழைகள்.

அழியாத கோலங்களைப் போலவே கதை ஒரு கதா மாந்தரின் பின்னோக்கிய பார்வையில் அமைந்தது. அந்த மூன்று பெண்களில் சுட்டியான மற்றும் இளையவரான ஹாரியட்டின் ஞாபகப் பின்னல் தான் இந்தப் படம். ஹாரியட் ஒரு ஜூட் தொழிற்சாலை மனேஜரின் மூத்த மகள். நான்கு சகோதரிகள், ஒரு சகோதரன் கொண்ட குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் அப்பா அம்மா தவிர ஒரு தாதியும், வீட்டுக் காவளாளியாக ஒரு சர்தார்ஜி. சகோதரனுக்கு கானு என்னும் ஒரு இந்திய நண்பனும் உண்டு. அந்தத் தொழிற்சாலையின் அதிபர் மகள் வாலரி , இந்தக் குடும்பத்துடன் ஒன்றிப் போனவள். இவர்கள் அடுத்த வீட்டில் வசிக்கும் வெல்ளை நபருக்கு அவரது இந்திய மனைவியின் மூலம் பிறந்த ஒரு மகள் மெலனி.. தாய் கிடையாது. மெலனி ஒரு இந்தியப் புடைவைக்குள் ஒளிந்திருக்கும் மேற்க்கத்தியவள் அல்லது மேற்க்கத்திய சூழலில் சிக்கிக் கொண்ட இந்தியப் பெண். இந்தச் சூழலில் போரில் ஒரு காலை இழந்த ஒர் அமெரிக்கர், மெலனியின் சொந்தக்காரர், தனது தனிமையைப் போக்க மெலனி வீட்டிற்கு வருகிறார். இந்தப் படத்தில் கூடவே கங்கையும் வங்காள வாழ் சூழலும் ஒரு பாத்திரங்கள் தான்.

போஸ்ட் காலனியல் படங்களைப் பற்றி ஒரு ரேஸிச குற்றச் சாட்டிருக்கும். படம் பார்க்கும் போது அதன் கூறுகள் ஏதேனும் தென்படுகின்றதா எனப் பார்க்க மனம் விழைந்தாலும் அம்பதுகளில் எடுக்கப்பட்ட படம் என்ற என்ணம் அந்த ஆவலை அடக்கிவிட்டது. அம்பதுகளிலோ/அறுபதுகளிலொ இவ்வளவு ஏன் 90/00 களில் இருக்கும் ஆண்டைப் படங்களில் இருக்கும் அப்பட்ட சாதியங்களை மென்று முழுங்கி விட்டு 50களின் வெள்ளை ரேஸிச ஆராய்ச்சி பண்ணுவது கேவலம் தான். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளாக பலவற்றைச் சொல்லலாம். முதல் காட்சியில் ஆற்றில் துடுப்பு போடும் கருப்பு உருவங்கள். தொழிற்சாலையில் இருந்து களைப்புடன் வெளிவந்து பட்டம் வாங்கும் அப்பா, துக்கினியோண்டு இருந்து கொண்டு புடவைபோல் உடுத்தியிருக்கும் உடையுடன் விருக் விருக்கென்று நடக்கும் ஒரு
சிறு பெண் செல்லும் காட்சியும் அழகு. இந்தியாவில் வெள்ளைக் குடும்பம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் தனமாக இல்லாமல் இயல்பாக பொருந்தியிருப்பதாக காட்சியமைப்புகள் முக்கியமாக அந்தக் குடும்பத்தின் உடைகள் மற்றும் அதன் கலர்கலின் தேர்வு. துடுக்குத்தனமான அந்தச் சிறுவன் தன் இந்தியத் தோழனுடன் நல்ல பாம்பிற்கு பால் கொடுத்து மகுடி வாசித்து மயக்க நிணைக்கும் அந்த துடுக்குத் தனம் நிறந்த காட்சியும் பின்னர் சிறுவன் இறந்தவுடன் குற்ற உணர்ச்சியும் துக்க உணர்ச்சியும் ஒருங்கே கொடுத்த கண்களுடன் நிற்கும் அந்த இந்தியச் சிறுவனின் முகம் - அற்புதம். தன் மகள்கனின் காதலைப் பற்றிப் பேசும் அந்த தாய் தந்தையர், வயதுக்கு வருதலைப் பற்றி பேசும் தாயும் மகளும் வரும் காட்சிகள், அந்த தாதி - குழந்தைகள் காட்சி மற்றூம் இந்த இடங்களின் வசனம். படத்தில் வரும் இந்து கலாச்சார விவரனைகளை நமக்கில்லை என்று பார்த்தால் படம் பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது எனச் சொல்லலாம். படத்தில் மிகவும் உள்ளே இழுத்தது காமெராவை கையாண்ட விதம் தான்.

படத்தின் சில காட்சியமைப்புகள் காமிரா நகர்தல்கள் சத்தியஜித்ரேவை ஞாபகப் படுத்தியதும் இப்போழுது கூகிளில் சத்தியஜித்ரே இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதும் அவரது திரை பிரவேசத்திற்கு இந்தப் படம் ஊன்றுகோளாக இருந்ததும் உபரிச் செய்திகள்.

0 comments: